சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் கடந்த 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, ரோவர் சந்திர மண்ணை நகர்த்தி ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, அவ்வபோது விக்ரம் லேண்டர் தரையிறங்கும் புகைப்படங்கள், தரையிறங்கிய பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ரோவர் வெளியேறும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதாவது, விக்ரம் லேண்டரில் 10 சென்சார்கள் மூலம் வெப்பநிலை கண்காணிக்கப்படுவதாகவும், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவியான CHASTE, நிலவின் மேற்பரப்பில் முதல் வெப்பநிலை அளவீடுகளை பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 10 சென்டிமீட்டர் வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.