எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான (2024) டான்செட் தேர்வு மார்ச் 9ஆம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழ்நாட்டில் 14 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 10) தொடங்கி பிப். 7 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதும். தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும், விவரங்களை மேற்கண்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.