தந்தையின் கண்முன்னே அரசுப் பேருந்து மோதி, தலை நசுங்கி மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபால். இவருக்கு மகராசி (22), செல்வி ஆகிய இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் மகராசி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து முடித்த நிலையில், 2வது மகள் செல்வி தற்போது அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் செல்வியைப் பார்த்து விட்டு வருவதற்காக ஜெயபாலும், மகராசியும் இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களது இருசக்கர வாகனம், காவல் கிணறு – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய் மொழி பகுதியில் வந்த போது, அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர், வாகனத்தை எடுக்க இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக ஓட்டுநரின் கட்டைப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மகராசி உயிரிழந்தார். மேலும், தந்தை ஜெயபால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மகராசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பஸ் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பைக்கோடு இழுத்து செல்லப்பட்ட ஜெயபாலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.