டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் கவிதாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கவிதாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வாதங்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.