டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், அமைச்சருமான ராஜ்குமார் ஆனந்த், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த ராஜ்குமார் ஆனந்த், “ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட செயலை பார்த்த பிறகு நான் அதில் சேர்ந்தேன். இன்று, கட்சியே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் விலக முடிவு செய்துள்ளேன். ஆம் ஆத்மி கட்சியில் தலித் எம்எல்ஏவோ, கவுன்சிலரோ இல்லை. தலித் தலைவர்கள் தலைமைப் பதவிகளில் கூட நியமிக்கப்படுவதில்லை.
நான் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். தலித் மக்களுக்காக என்னால் பணியாற்ற முடியவில்லை என்றால், கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை” என்று ராஜ்குமார் ஆனந்த் கூறியுள்ளார்.