பாஜக தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அலோக் கெலாட் மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பேசிய அவர் “ராகுல் காந்தி அதானி பிரச்சினையை எழுப்பினார்.. அரசாங்கம் பாராளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவரது கேள்விக்கு பதிலளிக்காமல், அவரை பாராளுமன்றத்தை விட்டு வெளியே தள்ளினார்கள்.. நாடு எங்கே செல்கிறது? ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டுகள் தொடர்கின்றன. நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கும்’’ என்று தெரிவித்தார்..
முன்னதாக 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது..
மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.. எனினும் 2 ஆண்டு சிறைத்தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதற்கு முன் ராகுல் காந்தி இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..