டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 300 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் வங்காளதேசம் இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்ததால், வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், 303 பேர் தீவிர காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.