உத்தரகண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூர், டேராடூன் பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை சோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநில சுகாதார துறை முடுக்கிவிடப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டதில், டேராடூனில் மட்டும் அதிகபட்சமாக, 540 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகிஉள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர்.
இதில், மாநிலம் முழுதும் 1,106 பேருக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.