பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் பம்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, “சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சீசனை முன்னிட்டு நிலக்கல்-பம்பை இடையே தினசரி 200 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தனி பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால், குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.