தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சிலர் மருத்துவ கல்வித்தகுதியின்றி கிளினிக் நடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகளின் இணை இயக்குனர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து இணை இயக்குனர் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பாலக்கோடு பகுதியில் மருந்து ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம் சந்திரா மேரி கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் போன்ற ஒரு அடங்கிய குழுவினர் பாலக்கோடு அருகே உள்ள எழுங்களப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் அருகே உள்ள கெட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 48 என்பவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மெடிக்கல் ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்ததும், அந்த மெடிக்கல் ஸ்டோரில் கடந்த 10 வருடங்களாக நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை வழங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவருடைய மெடிக்கல் ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு பாலக்கோடு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகாரை அடுத்து காவல்துறையினர் முருகேசன் கைது செய்து மருத்துவ சிகிச்சை வழங்க அவர் பயன்படுத்தி வந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.