சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் கையிருப்பு இல்லை என்ற பலகைகளால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எதிர்கொண்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்ட போதும் கணிசமான அளவு விலை குறையவில்லை. அதேநேரத்தில் கடந்த 107 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. சென்னையில் 107-வது நாளாக இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![சென்னையில் டீசல் தட்டுப்பாடு..! பெட்ரோல் பங்க்குகளின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிருப்தி..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/05/petrol-1.jpg)
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் இன்று காலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் கையிருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாடு திடீரென ஏற்பட்டதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்ட தடை, தாமதம் ஆகியவற்றால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.