மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா மதுரை விமான நிலையத்தில் கடந்த வாங மயங்கி விழுந்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து வரும் நிலையில், தனது ரசிகர்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை சமிபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “என் அன்பான தமிழ் மக்களே, நான் உங்கள் அன்புக்குரிய பாரதிராஜா. உடல்நலக் குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் சிறப்பான சிகிச்சையாலும், அன்பான கவனிப்பாலும் குணமடைந்து வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாததால், என்னை நேரில் பார்க்க வரவேண்டாம் என அன்பானவர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் குணமடைந்து உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என கூறியிருந்தார்.
பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்ஜிஎம் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாரதிராஜா உடல்நிலை சீராக இருப்பதாகவும்; சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.