கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அண்மையில், கொரோனா பெருந்தொற்று அவசர நிலையை விலக்கி கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இதனால், உலக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்தார்.
உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறிய பிறகு அதன் இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் என தேர்வு செய்யப்பட்டு வெளியான இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த நோய்களில் எபோலா, சார்ஸ், ஜிகா வைரஸ் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த நோய்கள் பற்றி உலக மக்கள் பரவலாக அறிந்து இருந்தாலும் இறுதியாக பட்டியலில் ‘Disease X’ என குறிப்பிடபட்டுள்ளது சற்று அச்சம் ஏற்படுத்துவமாக அமைந்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தொடர்ச்சியான பெருந்தொற்றுக்கள் Pathogen (நோய்க்கிருமிகள்) மூலம் ஏற்படக்கூடும் எனவும் தற்போது மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதுவகையான வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை என்பதாக கூட இருக்கலாம். சிகிச்சை முறைகள் எதுவும் அறிந்திடாத ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற பட்டியலை வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே கொரோனா 1 உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது கவனிக்க வேண்டியது.