தேனி மாவட்ட திமுகவை பொறுத்தவரை தெற்கு மாவட்ட திமுக, வடக்கு மாவட்ட திமுக என நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்பட்டுள்ளது. தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். நீயா நானா என அதிகார யுத்தம் நடத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் என்றாலும் தேனி வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டிருப்பதால், தாமரைக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமாருக்கும் மாவட்டச் செயலாளரான தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் இடையே நடக்கும் அரசியலில் தாங்கள் பலிகடா ஆக்கப்படுவதாக ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் தாமரைக்குளம் திமுக நிர்வாகிகள்.
இதனிடையே தேனி மாவட்டத்தில் அதிமுகவை வலிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீண்ட நாட்களாகவே சைலண்டாக மேற்கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்ட திமுகவில் யார் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அதிமுக பக்கம் தூக்குவதற்கான முயற்சிகளை எடப்பாடி தரப்பு மேற்கொண்டு வந்தது. அந்த முயற்சியில் இப்போது வெற்றியும் காணத் தொடங்கியுள்ளது. தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதை தங்க.தமிழ்ச்செல்வன் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.