8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தப் பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின் பேசும்போது, 8 வழிச்சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்யத் தான் சொன்னார். மேலும், 8 வழிச்சாலை திட்டத்துக்கு திமுக எதிரி இல்லை. போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுபடுத்தி தான் ஆக வேண்டும் மற்றும் நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. ஒன்றிய அரசின் திட்டம் இது. நாங்கள் இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதிமுக அரசு பேசி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதை சரி செய்யத்தான் சட்டமன்றத்தில் சொன்னோம். மற்றபடி, 8 வழிச்சாலையை பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க ஒன்றிய அரசின் முடிவு. சாலை அமைக்கப்படுமா? இல்லையா? என அரசு தான் அறிவிக்கும். நான் பேசிய கருத்து தவறாக திரித்து கூறப்பட்டு விட்டது” என தெரிவித்தார்.