உணவில் கூடுதலாகத் தூவும் உப்பு, அகால மரணத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவில் உப்பு சேர்ப்பது உடலில் எத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அறிய 500,000 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வு பற்றிய ஒரு கட்டுரையை ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் வெளியிட்டது. அந்த ஆய்வில், உப்பை எந்த அளவு அதிகம் உணவில் சேர்க்கிறோமோ அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் குறைக்கும், உணவில் கூடுதல் உப்பைச் சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர். எனவே நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் உணவில் உப்பை குறைப்பது மிகவும் நல்லது. உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம்.
உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வயிற்றுப்புண், இதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக்கல் பாதிப்புகள் ஏற்படும். ரத்தத்திலும் உப்புச்சத்து அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் குறையும். சில நோய்கள் தாக்கும் போது உப்புச்சத்து அதிகரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. அதிக உப்பு, ரத்த நாளத்தின் உட்புறம் கொழுப்பாகப் படிகிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரைநோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக நாம் உணவிற்காக எடுக்கும் உப்பின் அளவை பாதியாகக் குறைத்தால் ரத்த அழுத்தமும் குறையும்.
உப்பில் இருக்கும் ரசாயன சத்துகள் நமது உடலில் நீர்ச்சத்து, ரத்தத்தின் அளவு குறையாமல் பாதுகாக்கிறது. இதயம் சீராக செயல்பட மிகவும் உதவுகின்றன. என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. உடலில் உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும். உப்பை குறைவாகச் சாப்பிடும் நபர்களோடு, உப்பை அதிகம் சாப்பிடும் நபர்களை ஒப்பிட்டுச் செய்த ஆய்வில், உப்பை குறைத்துப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததும் உப்பை அதிகம் பயன்படுத்தியவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டதும் முன்கூட்டியே இறப்பதும் தெரிய வந்திருக்கிறது. உணவில் உப்பின் அளவைக் குறைப்பது ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே சாப்பிடும்போது உப்பை அளவோடு சேர்ப்பதே உடல் நலத்துக்குச் சிறந்தது. உப்பு அதிகமுள்ள உணவுகளைத் தொடாதீர்கள்.