பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 200-க்கும் மேற்பட்ட நாய்கள், அத்தகைய பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் அழைத்து வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்நடைகளிடத்திலும், குறிப்பாக நாய்களிடத்திலும் வேகமாகப் பரவக் கூடியது கெனைன் பாா்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.
பாா்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோா்வுடன் காணப்படும். பின்னர் தொடா்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில், நாய்கள் இறக்க நேரிடும். பாா்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீா், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பாா்வோ வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். ஆனால், பலா் அதனை சரிவர செலுத்துவதில்லை. இதனால் தற்போது பாா்வோ வைரஸ் நோய் அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.