இந்தியா முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் இந்த நோட்டுகளை மாற்றாமல் வைத்திருந்தால் இப்போது உங்களுக்காக ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்களை மாற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதியை வெளிநாட்டினருக்கு ரிசர்வ் வங்கி மேலும் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரலான பதிவை PIB உண்மை சரி பார்த்து செய்துள்ளது. அதாவது, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வெளிநாட்டு குடிமக்களுக்கு மாற்றும் வசதியை நீட்டித்ததாக பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் போலியானது என தெரியவந்துள்ளது. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் இது தொடர்பான ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.