தற்போது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், சீண்டல்கள் அதிகமாகிவிட்டன. இதனால், குறிப்பாக சிறுமிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூடஇன்னும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோ என்று தோன்ற வைக்கிறது. அந்த வகையில் சேலம் அருகே சிறுமி ஒருவரிடம் இளைஞர் ஆபாசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் ஆனந்த் (வயது 23). இவர், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து தன்னிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால், ஆனந்த் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், பயந்து போன சிறுமி வேறு வழியின்றி, தனது தந்தையின் செல்போனில் இருந்து அந்த இளைஞருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் முதலிரவுன்னா என்னன்னு தெரியுமா? என கேட்டு அந்த இளைஞர் ஆனந்த் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
பின்னர், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.