ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால், கடக மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயிகள் அடி கோலுகின்ற சிறப்புமிக்க மாதம் ஆடி மாதம்தான். அத்தகைய ஆடி மாதம் இந்தாண்டு ஜூலை 17 ஆம் தேதியான இன்று பிறக்கிறது. அத்துடன் இன்று அமாவாசையும் சேர்ந்து வருகிறது. இந்த ஆடி மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இருக்கும்.
குறிப்பாக, இந்தாண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறது. ஆடி மாதத்தில் முதல் நாளான இன்று ஆடி 1ஆம் தேதி (ஜூலை 17) அன்று அமாவாசை வருகிறது. அதேபோல், ஆடி 31ஆம் தேதி (ஆகஸ்ட் -16) அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது. இதில் நாம் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே ஆடி அமாவாசையாகக் கடைபிடிக்க வேண்டும்.
ஒரு மாதத்தில் ஜன்ம நட்சத்திரம் 2 தினங்கள் வரும் என்றால், 2-வது நட்சத்திரத்தையே நாம் ஜன்ம நட்சத்திரமாகக் கருத வேண்டும். அந்தவகையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாகக் கருதி முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் வசுருத்ர ஆதித்யர்கள் எனப்படும் 3 தலைமுறை பித்ருக்களின் பெயரைச் சொல்லி வார்க்கும் எள்ளும், தண்ணீரும் நம் சந்ததிக்குப் புண்ணியத்தைத் தேடித் தரும்.
வழிபடும் முறை:
ஆடி முதல் நாள் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலம் போட வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நிலை வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும். அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமான சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கயிறு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
ஆடி அமாவாசையின் சிறப்புகள்:
சூரியனும், சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாள் தான் அமாவாசை. மாதம்தோறும் அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தால், அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். அவர்களின் ஆசியினால் சகல சௌபாக்கியங்களும் நம் இல்லங்களில் பெருகும்.
ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது உறுதி. பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம்.