பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாய், தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயை பார்த்ததுமே சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர் சுரக்க வைத்து விடுகிறது. ஆனால், இது தற்போது ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கின்றனர் உணவுத்துறை அதிகாரிகள். சமீபத்தில் கேரளாவில் துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் ரசாயனங்களை பஞ்சமிட்டாய் தயாரிக்க பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொல்லம் மாவட்டத்தில் முகாமிட்டு பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வட மாநிலத்தவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் ரோடமைன் என்னும் துணிகளில் நிறம் ஏற்ற பயன்படும் ரசாயனம் இருந்ததையும் அதை பயன்படுத்தி பல வண்ணங்களில் பஞ்சுமிட்டாய்கள் தயாரித்ததையும் கண்டுபிடித்தனர். புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரோடமைன் ரசாயனத்தை பஞ்சு மிட்டாயில் கலந்திருந்ததை கண்டு கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து வட மாநிலத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.