கூகுள் பே (Gpay) மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தப்படுகிறது. இது பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர். இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே விரும்புகின்றனர். ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது. அதேவேளையில் எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சனைகளும் உருவாகின்றன.
யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கு அல்லது ஜிபேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையத்தில் புகார் அளித்து பணமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.