தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும்.
இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் இந்த பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவும் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில், இந்தாண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சுமார் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி இருக்கிறது ரயில்வே. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் ரயில்வேயின் https://www.irctc.co.in/ என்ற இணையதளத்திலும் அனைத்து ரயில் நிலைய கவுண்டர்களிலும் டிக்கெட்டுகளை பெறலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9 ஆம் தேதி பயணிக்கலாம். நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10 ஆம் தேதி ரயிலில் செல்லலாம். ரயில் டிக்கெட்டுக்கு இன்று முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியான உடனே பலரும் ரயில்நிலைய புக்கிங் கவுண்டர்களிலும், ஐஆர்சிடிசி இணையதளத்திலும் காத்திருந்தனர். புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்தே மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர்.