சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்த மருத்துவர், ஆபாசமாக அந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தனது கணவர் வெளியூருக்குச் சென்ற நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு தனியாக சென்றுள்ளார். ஆனால், அங்கு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, மருத்துவர் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த போது, தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டியுள்ளார் அந்த மருத்துவர். பின்னர் இப்படி மிரட்டல் விடுத்து பலமுறை அந்த இளம்பெண்ணை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டி அவரிடம் இருந்து சுமார் ரூ.4,00,000 பணமும் பறித்துள்ளார்.
கணவன் வெளியூரில் இருக்கும் நிலையில் செய்வதறியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்த இளம்பெண், கணவர் ஊர் திரும்பியதும் கணவன் மீது நம்பிக்கை வைத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கதறியழுதபடி கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவரை கைது செய்யக்கோரி நடந்த சம்பவங்களை இருவரும் காவல்நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மருத்துவரை அதிரடியாக கைது செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அடுத்தக்கட்டமாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் இளம்பெண்ணின் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.