தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு கூட நிகழும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இதனால் வெளியே செல்வோர் ஆங்காங்கே உள்ள பழச்சாறு, கம்பங்கூழ், மோர் கடைகளில் தஞ்சமடைந்து தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும், கடும் வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில், அதிகப்படியான வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மரணம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் போய்விட்டது என்றால் ஹீட் ஸ்ட்ரோக் வரும். இது போல் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மரணம் கூட நேர வாய்ப்புள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், நீர் சத்து குறைவாக இருப்பவர்கள், இணை நோய்கள் இருப்போருக்கு உடலில் அதிகப்படியான வெப்பத்தை அதிகரிக்கும்.
இதனால் ஹீட் ஸ்ட்ரோக் வந்து அவர்கள் மரணமடைய வாய்ப்புள்ளது. அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் அறிகுறிகளை மிதமான அறிகுறி, நடுத்தரமான அறிகுறி, அதிகப்படியான அறிகுறி என 3 வகைப்படுத்தலாம். தண்ணீர் தாகம் எடுக்கும், உதடு காய்ந்து நாக்கு வறண்டு போகும். உடலில் வியர்வையே இருக்காது. தோலில் வறட்சி காணப்பட்டு கிராக் இருக்கும் இவை மிதமான அறிகுறியாகும்.
தலைவலி, வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் ஏற்படும் இது நடுத்தர அறிகுறிகள். இதே அறிகுறிகள் அதிகப்படியாக இருக்கும் போது பல்ஸ், பிபி குறைந்துவிடும், மூச்சு அதிகமாக வாங்கும், பிக்ஸ் வரும், கோமாவுக்கு செல்வார்கள், பேச்சு குழறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வரக் கூடாது. சிறிய குழந்தைகளை கூட மேற்கண்ட நேரங்களில் விளையாட அனுப்பக் கூடாது.
பருத்தியினாலான, தளர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்வோரும், வெளியே வேலை செய்வோரும் 3 அல்லது 3.5 லிட்டர் தண்ணீரை குடிக்கலாம். இதை விட மோரில் உப்பு சேர்த்து சாப்பிடலாம். மது குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தின் போது மது நிறைய குடித்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 15 அல்லது 20 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருப்போருக்கு சிறுநீரக பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இவர்களுக்கு வெயிலில் செல்லும் போது அதிக வியர்வை ஏற்படுவதால் சோடியம் குளோரைடு உப்பு அதிகப்படியாக வெளியே போவதால் வெப்பம் அதிகரிக்கும்.
இதனால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் தொற்றும் இதய பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயுடன் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு அதிகப்படியான மூச்சு இறைக்கும். ஆக்ஸிஜனின் அளவும் குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.