ஆதார் அட்டை, பயோமெட்ரிக் தரவு உள்ளிட்ட முக்கிய தகவல்களைக் கொண்டிருப்பதால், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு அத்தியாவசியமான ஆவணமாக மாறியுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன.. இத்தகைய கவலைகளைத் தீர்க்க, இந்திய தனித்துவ தகவல் ஆணையமான UIDAI அவ்வப்போது ஆதார் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2021/05/aadhaar-1-1024x683.jpg)
இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் அல்லது அரசாங்க திட்டங்களைப் பெற தங்கள் ஆதார் அட்டையின் நகலை வழங்க வேண்டாம் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என்றும், அத்தகைய சுற்றறிக்கை எதுவும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்றும் UIDAI தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள UIDAIக்கான இணைப்பும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் பற்றிய நம்பகமான தகவல்களைப் பெற, பயனர்கள் எப்போதும் uidai.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது… மேலும், மக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் பாதுகாக்கவும், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது..
தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மோசடியைத் தடுப்பது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் UIDAI வழங்கி உள்ளது.. அதன்படி பயனர்கள் UIDAI இலிருந்து வந்ததாகக் கூறும் செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.. அது போன்ற செய்திகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் எனவும், ஆதார் தொடர்பான துல்லியமான தகவல்களுக்கு பயனர்கள் uidai.gov.in போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களை பார்வையிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதிலும் மோசடிகளைத் தடுப்பதிலும் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.