ஆலங்குடியில் தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (55). இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் மற்றும் திருநாத் ஆகிய இருவருக்கு திருமணமான நிலையில், சோமசுந்தரம் (எ) அலெக்ஸ் திருமணமாகாமல் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மேலும், திருநாத் திருமணமாகி மேல சுண்ணாம்புகார தெருவிலேயே வசித்து வருகிறார்.
சதீஷ்குமாருக்கும் மேலமுத்துகாடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சதீஷ்குமாருக்கும் ரஞ்சனிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவனைப் பிரிந்த ரஞ்சனி, மேலமுத்துகாடு கிராமத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சதீஷ்குமாரின் தந்தை சந்திரமோகன் சதீஷ்குமாரை மனைவியுடன் சேர்ந்து வாழக்கூறியும் மனைவியை சென்று அழைத்து வரக்கூறியும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்து தினசரி தந்தையுடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சதீஷ்குமாரின் தாயார் வைரம், அவரது தந்தை ஊரான வெட்டன்விடுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, வீட்டில் சதீஷ்குமாரும் அவரது தந்தை சந்திரமோகனும் இரவு தனியாக இருந்தபோது வழக்கம்போல் சந்திரமோகன் சதீஷ்குமாரை அவரது மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை சந்திரமோகனை அடித்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
காலை சந்திரமோகனின் இரண்டாவது மகன் திருநாத்தின் மனைவி, தனது மாமனார் சந்திரமோகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குடி காவல்துறையினர், சந்திரமோகனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சந்திரமோகன் உயிரிழந்தார்.
இதனை அடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த சந்திரமோகன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.