தமிழ்நாட்டில் அடிக்கடி ரேஷன் பொருட்கள் திருடுபோவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை சிலர் திருடி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் என அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் பொருட்களை வெளியே விற்பவர்கள், திருடுபவர்கள் ஆகியோரின் ரேஷன் கார்டுகளை முடக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கையிலெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இந்த சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.