வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம். இந்த உதவித்தொகைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. 40 வயதுகுட்பட்டு இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 45 வயது மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணி புரியாதவராகவும், சுய தொழில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. NO.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.