கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்க நிலையில் இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தபோது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி தற்போது பேசி வருவதாக ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கனகராஜ் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தனபாலுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.