நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. இந்நிலையில், இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளன. எனவே, நாளை பேருந்துகள் இயக்கப்படும். இரு கோரிக்கைகளை தற்போது ஏற்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மற்றவை குறித்து பொங்கலுக்கு பின் முடிவு எடுக்கலாம் என கூறிய பின்பும் போராட்டம் அறிவித்துள்ளனர்“ என்றார்.