நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி (எ) சுரேஷ் (32). சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி மீனா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி மீனாவின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷ், நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்புக்கம்பியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மீனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
பின்னர், அவரை மீட்டு திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.