இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்..
நாடாளுமன்றத்தின் மைய மண்டத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி. ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவராகி உள்ளார் திரௌபதி முர்மு.. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம். பிர்லா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. பதவியேற்பு உறுதிமொழி எடுத்த பிறகு, உறுதிமொழிப் பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.. மேலும் தன்னை தேர்ந்தெடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. குடியரசு தலைவராக பதவியேற்றது பெருமையளிப்பதாக கூறிய அவர், நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்..
முன்னதாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.. அதன் வாக்குகள் கடந்த 21-ம் தேதி எண்ணப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.. 64 வயதான திரௌபதி முர்மு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடியின தலைவர் என்ற வரலாற்றை படைத்தார்.. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் இளம் வயது குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..