ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் திரௌபதி முர்மு பதவியேற்பார். திரௌபதி முர்மு உமா சங்கர் தீட்சித் லேனில் உள்ள தனது தற்காலிக இல்லத்திலிருந்து ராஜ்காட்டிற்கு காலை 08.15 மணிக்கு புறப்படுவார். அவர் காலை 08.30 மணியளவில் ராஜ்காட் சென்றடைவார்..பின்னர் காலை 09:22 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றடைவார். இதை தொடர்ந்து திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரான எம்.வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் மைய மண்டபத்திற்கு அழைத்துச் செல்வார்கள். திரௌபதி முர்மு அங்கு சென்றடைந்ததும், சென்ட்ரல் ஹாலில் தேசிய கீதம் இசைக்கப்படும்.
பதவியேற்பு விழா காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. அவருக்கு இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். உறுதிமொழி எடுத்த பிறகு, அவர் உறுதிமொழிப் பதிவேட்டில் கையெழுத்திடுவார். காலை 10:23 மணிக்கு, இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் மத்திய மண்டபத்தில் தனது முதல் உரையை ஆற்றுவார்.
முன்னதாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.. அதன் வாக்குகள் கடந்த 21-ம் தேதி எண்ணப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.. 64 வயதான திரௌபதி முர்மு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடியின தலைவர் என்ற வரலாற்றை படைத்தார்.. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் இளம் வயது குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..