இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டன. இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி நேரத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையும் வெகுவாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த 600 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கடந்த காலாண்டில் ரூ.75,000 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி, பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.