ஹரியானா மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர் ரவிகாந்த் லக்ஷ்மணன் ராவ். இவர் இந்தியாவில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை சென்னையில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவி காந்த் லக்ஷ்மண ராவ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சீதா ராமன் என்பவர் தங்கள் நிறுவனத்தோடு இணைந்து இடைத்தரகராக வியாபாரம் செய்ய கடந்த 2021இல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார். அதன் பின்னர் சுமார் 2 கோடி வரை வியாபாரம் செய்தார். மேலும் வியாபாரத்தை தொடர ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டார். ஆனால், நீண்ட நாள் ஆகியும் பொருட்களை வழங்காமல் பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2020/09/Amount.jpg)
இதுவரை 70 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியிருக்கிறார். மீதமுள்ள தொகையை வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது தான் சீதாராமன் மேலும் சிலர் தொழிலில் ஈடுபடுவதாக சொல்லி இணைத்திருக்கிறார். குடியாத்தத்தை சேர்ந்த சதீஷ்குமார், வசந்தகுமார், சரவணன், ஆசைத்தம்பி ஆகிய 3 பேருக்கு சீதா ராமனே புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1.80 கோடி பெற்றிருக்கிறார். இதில், ரூ.70 லட்சம் பணம் திருப்பி செலுத்திய நிலையில், மற்ற பணத்திற்கு போலியான ஆவணம், பில் தயாரித்து தனது நிறுவனத்தில் வழங்கியிருக்கிறார். 3 பேரிடம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் தனது மனைவி விஜிதா வங்கிக் கணக்கிற்கு மாற்றியிருக்கிறார். மோசடி செய்த பணத்தில் சீதாராமன் ஒரு பென்ஸ் கார், ஒரு டிராவல் வேன், அகரம் சேரியில் இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோடு ஒரு நாளைக்கு 30,000 வீதம் பெங்களூருவில் இருந்து பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மொத்த பணமும் காலியாகி விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் மனைவி விஜிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்காக தன்னிடம் உள்ள டிராவல் வாகனத்தை அடமானம் வைத்து பணத்தை மருத்துவமனையில் செலுத்தியிருக்கிறார். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்த சீதாராமன், கூட்டாளிகள் சரவணன், சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் வசந்தகுமார், சரண்ராஜ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.