மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி, தனது மகனுடன் போலீசில் சரணடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொற்கையை சேர்ந்த விவசாயி மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு ராஜராஜசோழன் (16), பாலமுருகன் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். போதைக்கு அடிமையான மகாதேவன், அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு மனைவி அமுதாவிடம் ரூ.500 வாங்கிக் கொண்டு, மகாதேவன் மது குடித்துள்ளார். மேலும், 2 பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பிளஸ்2 படித்து வரும் மகன் ராஜராஜசோழன், தந்தையை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகாதேவன் பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திக் கிழித்தார்.
இதை தடுக்க வந்த மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். அதை தடுத்து அரிவாளை பிடுங்கி மகாதேவன் கழுத்தில் அமுதா வெட்டினார். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மகாதேவன் இறந்தார். பின்னர் தனது மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று அமுதா சரணடைந்தார். இதையடுத்து, மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராஜரோஜசோழன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.