கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சென்னையில் வீடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நகர் மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் 1947ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் பின் காங்கிரஸ் ஆட்சியில் 1961இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுக்க வீட்டு மனைகள், வீடுகளைக் கட்டி குறிப்பிட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என்று 4 பிரிவுகளாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படும்.
ஆனால், கடந்த சில காலமாகவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டுப்படும் வீடுகள் தரமானதாக இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது.
அது ஏற்கனவே பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பல குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இன்று காலை அங்கே திடீரென ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், தங்கள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் புகுந்தனர். இந்த திடீர் நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேபோல இதனால் கட்டிடத்தில் ஏதேனும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.