கடந்த சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400ஆக அதிகரித்து இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராட் என்ற பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உயிருக்கு அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானை அதிர வைத்த இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. 3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்கு போராடி வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாக ஜன்னன் சயீக் தெரிவிக்கையில், “இதுவரை 2,445 பேர் உயிரிழந்துள்ளது. 9,240 பேர் இதில் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருக்கின்றன” என்று கூறி உள்ளார்.