”விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். புதிய மின்சார திருத்தச் சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டனம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது திமுக எம்பிக்கள் அதை மிக கடுமையாக எதிர்த்தனர். தற்போது இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ளது. அந்த மசோதாவில் மக்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விளக்கம் இல்லை. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் திட்டமாக அந்த சட்ட மசோதா உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது போல் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. எனவே, திமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது. எனவே மாதம் ஒருமுறை மின்கட்டணம் உயரும் என்பது தவறான தகவல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசுகையில், ”வாட்ச் விலை கேட்டதற்கும் அதனை வாங்கிய ரசீது கேட்டதற்கும் ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்கிறார். விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சை பொய் பேசுகிறார். வாட்ச் யார் வாங்கி கொடுத்தார்கள், அல்லது வெகுமதியாக கிடைத்தது, இன்னார் தனக்கு பரிசாக கொடுத்தார் என்றாவது தெரிவிக்க வேண்டும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாமல் இருக்கிறார். வாட்ச் வாங்கிய ரசீதை தயாரிக்க ஏப்ரல் ஆகும் போல” என்று விமர்சித்தார்.