மின்சாரத் துறையை முழுமையாக தனியார் மயமாக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்வதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். இந்த மசோதா ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு இந்த மசோதாவை எதிர்த்து திமுகவின் குரலை பதிவு செய்தார். இந்த சட்ட மசோதா நிறைவேறினால், தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம், குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவசம் மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. இது நிச்சயம் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி தான்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநில அரசுக்கும், மின்சார வாரியத்திற்கும் எந்த அதிகாரமும் இருக்காது. மின்சாரத் துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. முதலாளிகள் கையில் சென்றால் ஏழை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என எந்த ஷரத்தும் மசோதாவில் இடம் பெறவில்லை. சொந்த காசில் ஒருவர் கார் வாங்கினால் டீசல் அடித்து காரை இன்னொருவர் ஓட்டி செல்கிறேன் என்ற சொல்லும் போக்கு இது. முதலமைச்சர் இந்த மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்”. இவ்வாறு அவர் பேசினார்.