ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 45 பைசா உயர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 30 பைசா உயர்த்தப்பட்டதால், இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75 பைசா உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் ரூ. 1000 முதல் ரூ.2000 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நிலக்கரி மற்றும் நிலக்கரியை சுத்தம் செய்வதற்கான அதிக செலவு காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் மாநிலம் ராஜஸ்தான். விவசாயிகளுக்கு இப்போது 2000 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது” என்று கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ராஜஸ்தானில் மின்சார கட்டணம் ஏற்கனவே நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.