மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.06 கோடி பெண்கள் பயனடைவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1.63 கோடி பேர் உரிமைத்தொகைப் பெற தகுதியுடையவர்களாக விண்ணப்பித்திருந்தனர். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இத்திட்டத்தை வரும் செப்.15ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் பயனடைவர் என்பதால், கிடைக்கும் பாராட்டு ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம் என்றும், தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உரிமைத்தொகைப் பெற தகுதியிருந்தும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கருதினால், அவர்களின் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வங்கிகள் – பயனாளிகள் இடையான தொடர்பு சீராக உள்ளதா என்பதை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.