ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளது.. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், இடைத்தேர்தலில் யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறது.. எனவே இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பி படிவ விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கையெழுத்திட வேண்டும்.. ஆனால் இருவரும் சேர்ந்து கையெழுத்திட வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.. எனவே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தனித்தனியே போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா..? கூட்டணி அமைக்கப்படுமா போன்றவை தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பிஎஸ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..