மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அந்த 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.