பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா டுடே – சிவோட்டர் இணைந்து 2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை ’மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 1,25,123 பேர்களிடம் அவர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில், இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு எவ்வளவு சீட், எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்ற முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி வாக்கு சதவீதம் 5% உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்துள்ளது, அதிமுகவின் வாக்கு 3% சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 47% வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 18% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 23% வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த தேர்தல் நடைபெற்றிருந்தால், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 21% வாக்குகளைப் பெற்றிருக்கும் என்றும், இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 52% ஆக இருந்திருக்கும் என்றும், அதிமுக கூட்டணியின் வாக்குகள் 20% ஆக குறைந்திருக்கக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் பாஜக, அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள விஜய் உதவியுடன் தான் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு சவால் அளிக்க முடியும். இந்த இரு கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, திமுகவுக்கு கடும் சவால் அளிக்க முடியும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக் கணிப்பு தொடர்பாக சி-வோட்டர் இயக்குனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், ”தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில் X ஃபேக்டராக இருக்கக் கூடும். தேசிய அளவில் அவருக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும், களத்தில் ஒரு முக்கிய பிளேயராக மாறி வருகிறார். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிவது என்.டி.ஏ. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.