மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் 41 வயதான ரமேஷ். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு, 36 வயதான விசாலினி என்ற மனைவியும், 12 வயதான ரமிஷா ஜாஸ்பல் என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, ரமேஷ் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, ரமேஷின் வீடு திறக்கப்படவில்லை. மேலும், இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து திருப்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.