சுங்கக் கட்டணத்தில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ”தமிழ்நாட்டில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, சுமார் 64,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் மற்றும் தாலுக்காவை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026ஆம் ஆண்டிற்குள் சுமார் 2,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும் மற்றும் 6,700 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 2 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில், தற்போதுள்ள 1,280 தரைப்பாலங்களும், 2026-க்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பிற மாவட்டச் சாலைகளில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் சாலை மேம்பாலமாக மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டின், 10,000 கிலோ மீட்டர் பஞ்சாயத்துச் சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகள், 5 ஆண்டுகளில், பிற மாவட்டச்சாலை தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி சாலையை 6 மற்றும் 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது இன்றியமையாததாகின்றது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரியகோயில் ஆகிய இரண்டு கோயில்களும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் ஆகும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி கடின புருவங்களுடன்கூடிய, இரு வழித் தடச்சாலையாக, மேம்படுத்தப்படுகின்ற சாலைகள் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிலையை கணிசமாக அடையாததால், பொதுமக்களிடையே போரட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. எனவே, சுங்கக் கட்டணத்திலிருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.