இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான இன்று (அக்டோபர் 15 ஆம் தேதி) உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி மற்றும் மாணவர்களுக்காக அப்துல் கலாம் செய்த சேவைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2011 ஆம் ஆண்டு இவரின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அப்துல் கலாம் எப்போதும் மாணவர்களே எதிர்காலம் என்றும், நம் நாட்டை ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் முற்போக்கு மனதைக் கொண்டவர்கள் என்று நம்பினார். அப்துல் கலாமின் மாணவர்கள் மீது கொண்ட அன்பைக் கொண்டாடும் வகையில் உலக மாணவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இவர் ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதும் கனவு காணுங்கள், அதற்கான முழு முயற்சியுடன் அர்ப்பணிப்போடு செயலாற்றுகள், வெற்றி உங்களை வந்தடையும், என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை மாணவர்களிடையே ஊட்டிவிட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கை நோக்கிய பயணத்தை ஊக்குவித்தார்.மேலும் இந்த வருட மாணவர்கள் தினத்தின் கருப்பொருள் ” தோல்வி கற்றலின் முதல் முயற்சியை குறிக்கிறது ” என்பதாகும். மேலும் இந்த நாள் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் கல்விக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் நாளாக உள்ளது.