இலவச புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.11.2022 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள்.
உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு இந்த ஆண்டு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, இத்திட்டம் தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமைவதோடு, உற்பத்திப் பரப்பு அதிகமாக இது பேருதவியாக இருக்கும். உழவர்களின் ஆட்சியாகவும், வேளாண்மைப் புரட்சி செய்யும் ஆட்சியாகவும், இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் அரசாகவும் தமிழ்நாடு அரசு விளங்கி வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு 5,374 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயமின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின்இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிபிரிவில் மின்இணைப்பு பெற ரூ.10,000-, ரூ.25,000, ரூ.50,000 என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்த பிறகும் மின்இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், 5 குதிரைத் திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 இலட்சம், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 இலட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 இலட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 இலட்சம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் விவசாயமின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தருமபுரி மின்பகிர்மான வட்டம் தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் / கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.